முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகத்தின் மகள் ஹேமலதாவுக்கும் ,கே.ரமேஷ் என்பவருக்கும்கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதிதிருமணம் நடந்தது. வேளச்சேரியில் வசித்து வந்த இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ரமேஷம் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தார் ஹேமலதா
இதையடுத்து ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 22 நாட்கள் சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு வெளியே வந்தார் ரமேஷ். இதைத் தொடர்ந்து விவாகரத்து கேட்டு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ரமேஷ். அதில், ''தங்கள் திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டாம்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவிற்கு பதில் அளித்த ஹேமலதா, ''கணவருடன் சேர்ந்து வாழும் உரிமையை மீட்டுத் தரும்படி உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை கடந்த 2008ஆம் ஆண்டு விசாரித்த நீதிபதி, ரமேஷின் மனுவை தள்ளுபடி செய்தும் ஹேமலதாவின் மனுவை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் ஏற்கனவே ஹேமலதா தொடர்ந்த வரதட்சணை கொடுமை வழக்கில் இருந்து கணவர் ரமேஷம் , அவர் குடும்பத்தினரை விடுதலை செய்து மகளிர் நீதிமன்றம்.
இதையடுத்து, திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க மறுத்து குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ரமேஷ்.
அதில், ''ஹேமலதா பிடிவாத குணம் கொண்டவர். தான் நினைப்பதை செய்து முடிக்கும் குணம் அவரிடம் உள்ளது. அவரது இந்த குணத்தால் என்னால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது. எனது குடும்பத்தாரை விட்டு பிரிய வேண்டும் என்றும், தனியாக வாழ வேண்டும் என்றும் என்னை வற்புறுத்தினார். இல்லாவிட்டால், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். `நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா?' என்றெல்லாம் திட்டினார். இறுதியில் என் மீது போலீசில் பொய்ப்புகார் கொடுத்துவிட்டார். எனவே இனிமேலும் ஹேமலதாவுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை. எனவே எங்கள் திருமணத்தை செல்லாது என்று அறிவித்துவிட்டு, குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவிற்கு ஹேமலதா அளித்த பதில் மனுவில், என்னை ரமேஷ் அடித்து துன்புறுத்தினார். இதற்காக 2 முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறேன். அவரைவிட்டு நான் பிரிந்து செல்லவில்லை. அரசியல் செல்வாக்கை குடும்பத்தில் பயன்படுத்தினேன் என்று என்னைப் பற்றி அவர் சொல்வதில் உண்மை இல்லை'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்து நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பில், மனைவி கொடுமை செய்ததாக கூறிய குற்றச்சாற்றை ரமேஷ் நிரூபிக்கவில்லை என்று கூறி அவரது மனுவை குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் எங்கள் முன்பு வைக்கப்படும் கேள்விகள் இரண்டுதான். மனைவி கொடுமை செய்தார் என்ற காரணத்தைக் காட்டி அவரிடம் இருந்து விவாகரத்து பெற கணவருக்கு உரிமை உள்ளதா? அதே சூழ்நிலையில், மனைவி தனது கணவனுடன் இணைந்து வாழ்வதை ஏற்க முடியுமா? என்பவைதான்.
கணவன் தன்னை கொடுமைப்படுத்தியதாக ஹேமலதா கூறுகிறார். ஆனால் குடும்பநல நீதிமன்றத்தில் அவர் விவாகரத்து கேட்கவில்லை. தன்னை மனைவி கொடுமைப்படுத்துவதாகக் கூறி கணவன் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்து 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான், கணவனுடன் சேர்ந்து வாழும் உரிமையைக் கேட்டு ஹேமலதா மனு தாக்கல் செய்திருக்கிறார். கணவன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் போலீசில் ஹேமலதா புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு 22 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார். அவர் ஜாமீன் பெறுவதையும் ஹேமலதா எதிர்த்து இருக்கிறார்.
மனைவியின் இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது, ரமேஷ்தான் மனைவியிடம் இருந்து கொடுமைகளை அனுபவித்திருப்பது தெரிகிறது. கணவன் மீது கூறிய கிரிமினல் குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை. இவ்வளவு கொடுமைகளை செய்துவிட்டு, கணவனுடன் சேர்ந்து வாழும் உரிமையை கேட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? அன்பெல்லாம் அகன்ற பிறகு, 2 பேரும் எப்படி சேர்ந்து வாழ முடியும்?
எனவே சேர்ந்து வாழும் உரிமையை இங்கு அவர் கோர முடியாது. அது தொடர்பான ஹேமலதாவின் மனுவை குடும்ப நல நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது தவறு. அதோடு மனைவியிடம் இருந்து கொடுமைகளை அனுபவித்த கணவன் ரமேஷ், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு உரிமை உள்ளது. இதனடிப்படையில் 2 பேரின் திருமணம் செல்லாது என்று அறிவிக்கிறோம். இவர்கள் வழக்கில் குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை தயக்கமின்றி ரத்து செய்கிறோம். ரமேஷ் தனது மனைவிக்கு ஒரே 'செட்டில்மெண்ட்' ஆக இன்னும் ஒரு மாதத்துக்குள் ரூ.2.50 லட்சத்தை கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.
thanks Palaniswamy
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்