கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. கடந்த 5 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.
முதல் நாள் விசாரணையில் நீதிபதி ஹேமந்த் குப்தா, மத உரிமையை பள்ளி வரை எடுத்துச் செல்லலாமா என்று கேள்வி எழுப்பினார். 'அடை அணிவது அடிப்படை உரிமை எனில், ஆடை அணியாததும் அடிப்படை உரிமையாக இருக்கும். மற்றவர்கள் பள்ளியில் சீருடை அணிந்திருக்கும்போது, இவர்கள் தலையில் முக்காடு அணிகிறார்கள்.'
அப்போது வழக்கறிஞர் காமத், தென் இந்தியாவை சேர்ந்தவர்கள் பள்ளிக்கு செல்லும்போது பூணூல், ருத்ராட்சம் போன்றவற்றை அணிவதாக தெரிவித்தார். குறிக்கிட்ட நீதிபதி ஹேமந்த் குப்தா, 'பூணூல், ருத்ராட்சம் சட்டைக்கு உள்ளே இருக்கிறது. யாரும் நமது சட்டையை கழற்றி பார்க்க மாட்டார்கள். அது பள்ளி ஒழுக்கத்தை மீறும் செயலாகாது. மதசார்பின்மை என்ற வார்த்தை உண்மையான அரசியலமைப்பில் இடம்பெறவில்லை.'
கடந்த திங்கள் கிழமை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஹிஜாப் தடைக்கு எதிராக ஆஜரான மூத்த வழக்கறிஞரும் இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சல்மான் குர்ஷீத், 'இஸ்லாத்தில் கடமை மற்றும் கடமை இல்லை என்ற இரட்டை நிலை கிடையாது. குர்ஆனில் இருப்பது எப்படி கடமையாக உள்ளதோ அதேபோல் முஹம்மது நபி தெரிவித்த கருத்துக்களும், போதனைகளும் கடமைதான். அனைவரும் மனதில்கொள்ள வேண்டிய முக்கியமான விசயம் இது.' என்றார்.
இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் தார், '1400 ஆண்டுகள் முன்பு அருளப்பட்ட குர்ஆனில் உள்ள சூராக்களில் இடம்பெற்றுள்ள அல்லாஹ்வின் கட்டளை எதுவாக இருந்தாலும் அது கட்டாயமாகும். அவற்றை திருத்தம் செய்ய முடியாது. குர்ஆன் என்பது அல்லாஹ்வின் உத்தரவு. அதை பின்பற்றுவது அவசியம்.
இஸ்லாமியர்கள் குர்ஆனை பின்பற்றுகிறார்கள். மரணத்துக்கு பின்னர் நியாய தீர்ப்பு நாளில் அது தொடர்பாக கேட்கப்படும். ஹிஜாப் விவகாரம் கவலையை ஏற்படுத்தினாலும், இந்த சிறந்த நாட்டில் அரசியலமைப்பு பாதுகாப்பை அளிக்கிறது. நாங்கள் புர்கா அணிந்து செல்ல அணிந்து செல்ல அனுமதி கேட்கவில்லை. முக்காடு போடவே அனுமதி கோருகிறோம். நம் நாட்டில் விமான நிலையங்களில் கூட வழிபட இடங்கள் உள்ளன.' என்றார்.
நன்றி : one india
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்